கவிதைகள்
1.
உனைக் காணாது வரும் வேதனை
தினம் கண்ணீரில் ஆழ்த்துதெனை
துயர் தீயின் முனை
நெஞ்சில் தீண்டுதெனை
இந்த வலி தீர என்றுதான் காணபேன் உனை
கண்ணீரின் மாறாத தடம் ஆனதே-கன்னம்
காயாத ஓடைக்கு இடமானதே
மண் வீழ்ந்து வீணான தேனானதே-காதல்
மீளாத துயிலுக்கு ஆளானதே
நீ நீங்கின் வாழாத உயிரானதே-உடல்
தான் நீங்கி தனியாக தவிக்கின்றதே
விண்மீதில் காற்றாக அலைகின்றதே-அது
பண்பாடி உன்னை தேடி அழைக்கின்றதே
ஓயாத புயலாக நினைவானதே-அங்கு
காற்றாடும் சருகாக மனமானதே
ஆறாத காயங்கள் உருவானதே-அதை
தீ நாக்கு சுவை பார்க்க ரணமானதே
நீ நீராடும் நீரோடை போலானதே-கண்கள்
தூங்காது செந்தூர நிறமானதே
கார்மேகம் தான் சூழ்ந்த நிலவானதே-நெஞ்சம்
நீருக்குள் நெருப்பாக எரிகின்றதே
மணலான நதியாக உணர்வானதே-வெறும்
மரமாக தரைமீதில் உடல் சாய்ந்ததே
நீயில்லாத நேரங்கள் விஷமானதே-உன்
நினைவில்லா நிலைதானே சாவென்பதே.
2.
என் கண்களில் உனக்கு
செய்தியில்லை
என் சொல்லிலும் உனக்கு
சுகம் இல்லை
கல்லிலும் முள்ளிலும்
என் பாதை
இதில் உடன்வர உனக்கு
ஏன் ஆசை
உனக்கென நான் வந்து
பிறந்தேனா - இல்லை
எனக்கென நீ இங்கு
வளர்ந்தாயா
யாருக்கு யாரென
அறிந்திருந்தால் - இந்த
பிரிதலும் துயரமும்
வாராதே.
என் கண்களில் உனக்கு
செய்தியில்லை
என் சொல்லிலும் உனக்கு
சுகம் இல்லை
என் துயர் உனதென
அழுதாயா - இல்லை
நான் உன்வலி
தாளாதழுதேனா
நமக்கென இந்த
மண்ணுலகில்
நம்மை தவிர
யாரழுவார்
என் கண்களில் உனக்கு
செய்தியில்லை
என் சொல்லிலும் உனக்கு
சுகம் இல்லை
என் நினைவுகள் ஓய்கையில்
கனவினில் நீ - அந்த
கனவுகள் கலைகையில்
நினைவினில் நீ
என் உயிரிலும் உணர்விலும்
கலந்தவளே
நம்மிடை சுவரொன்றை
எழுப்பியதார்
என் கண்களில் உனக்கு
செய்தியில்லை
என் சொல்லிலும் உனக்கு
சுகம் இல்லை
கருத்துகள்
கருத்துரையிடுக