துணுக்குகள்

  மனசு.

******

சஞ்சலமான மன நிலை மாற

ஒரு ஓவியம் வரைய

தொடங்கினேன்


வரைந்திட்ட பெண்ணின்

முகத்தில் சோகத்தின் சாயல்


கண்களை திருத்திப் பார்த்தேன்

மேலும் கலங்கியதாய்

தோன்றியது


மேல் உதட்டை மேல் நோக்கி

வளைத்தேன்

மீசை போல் ஆனது


எப்படி திருத்தினாலும் சோகம்

மாறவில்லை


இதற்கிடையில்

சிரிப்பலைகள் எழுவதை கேட்டு 

வெளியே வந்தேன்


எதிர் வீட்டு குழந்தை 

அடித்த லூட்டியில் அதிர்ந்தது

வீடே சந்தோஷத்தில்.


குழந்தை சென்றதும் 

உள்ளே வந்து

சிரித்துக்கொண்டே ஓவியத்தை

திருத்தி வரைய அமர்ந்தேன்


ஆனால் ஓவியமோ 

சந்தோஷ முகத்துடன் என்னை

பார்த்து சிரித்துக் கொண்டு 

இருந்தது.


(விஞ்ஞானி)



:

     சிட்டுக்குருவி தினம் .

***********************


நானும் எழுதலாம் என்று

சன்னலோரம் அமர்ந்து

பழைய நாட்களுக்குள்

பயணித்து அலைந்து

திரிந்ததில் சிறிது

கண்ணயர்ந்து விட்டேன்


விழித்து பார்க்கையில்

எழுத இருந்த வெள்ளை தாளில் வெள்ளையாய் பிசு பிசுவென 

அருகி வரும்

சிட்டுக்குருவியின்

எச்சம்.


(விஞ்ஞானி)



பாம்பாட்டம்.

**********************

பனை மரத்துக்கு அடியில்

இருந்த பாம்பு புற்றில் கொட்டங்கச்சியில்

பாலூற்றி வைத்த 

பக்தனிடம் பாம்பு 

சொன்னது


எப்படியும் இந்த பாலை கள்ளென்றுதான் சொல்வார்கள்

பேசாமல் நீ குடிக்கும் கள்ளையே இதிலேயும் ஊற்றி வை பருகி விட்டு 

படமெடுத்து ஆடுகிறேன் என்று.



(விஞ்ஞானி)



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்